Wednesday 20 April 2016

இருளின் ஒலிமுகங்கள்

இருளின் ஒலிமுகங்கள்

- - - - - - - -

இரவின் மேல் படரும் உணரொலிகள்
ஆழ்மனதின் காதுகளுக்குள் இறங்குகின்றன

இருளின் ஒலிமுகங்கள்,

தனிமையின் பெருத்த மௌனத்தை
புல்லாங்குழலின் விழிகளில் இருந்து
கசியவிட்டிருக்கிறது

முகமறிய ப்ரியப்படும் இருளின் கடவுள்கள்
இரவின் கவிதைகளை வாசித்துக்காட்டுகின்றனர்
மொழி உருண்டோடும் பாதைவெளிகளில்
கனவுகளின் நிசப்தங்கள்

விரல்களின் அணைப்பில் பரவும் கதகதப்பில்
மெத்தைமேல் விரியும் இருளின் ஒலிகள்
பசித்த ஆட்டுக்குட்டியின் கண்களை
முத்தமிடுகின்றன

காத்திருத்தலுக்கான தலைவியின் காதல்
மௌனத்தின் சுடரொளியை மேயத்தொடங்கியது
அவளின் திசையில் எரிகிற காட்டுத் தீ
தனிமையின் ஊடலை பெருங்காடாக்கி எரிக்கிறது

மணம் வீசுகிற பாதையின் வனத்தில்
மலர் விரிகிற நுண்சப்தம்
இரவின் காதுகளில் விழுந்தெழுகிறது,
திசையெங்கிலும் தனித்துக்கிடக்கிற ஒற்றைமுத்தங்கள்
மலரின் மகரந்தவெளிக்குள் நிறைந்து கிடக்கின்றன

அமிழ்தல் அற்றுக்கிடக்கிற ஒலிமுகங்கள்
இரவின் மழையில் சடசடக்கின்றன
ஒலிஒளியிலான இரவென்பது
ஒவ்வொரு கண பிறத்தலிலான அழுகையின் முழுமை ..

- அதிரூபன்

No comments:

Post a Comment