Friday 15 April 2016

நீரில் விழுந்த காடு

நீரில் விழுந்த காடு

- - - - - - -  - -

நிழலடர்ந்த வனநிலத்தின் மரங்கள்
வெய்யில்நேர பைக்கால் ஏரியில்
உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்

அலகு நீண்ட பறவையின் பசி
இந்த நீரின்மீனை கவ்விக்கொண்டிருப்பதான பிம்பம்
இந்த நீரில் துடித்திக்கொண்டிருக்கிறது

செவ்வெறும்புகளின் கூடொன்று
கொய்யாஇலையின் உடலெங்கிலும் படர,
நீரின் மேலே விழுந்த மரங்களில்
ஊறிக்கொண்டிருக்கிறன உயிர்கள்

வலுவிழந்து முறிந்த கிளையொன்றில்
ஒரு இலையின் உயிர் பிரிந்துபோக,
இன்னும் ஆதித்தோற்றத்து பிஞ்சிலைபோல் இருக்கிறது
நீரில் விழுந்த நிழலிலை

மரவிலங்கொன்று
காட்டுமரத்தின் மேலேறி உறங்க,
வயிறுப்பி இறந்துபோய் மிதக்கிற உடல்
இந்த விலங்காக இருக்கிறது

பறவையின் இறகுதிர்த்தலின் போது
சிறகுக்கூடை பிரிந்த இறகொன்று
நீரின் மேலே விழ,

ஒரு காடு குழைகிறது ..!

- அதிரூபன்

No comments:

Post a Comment